தமிழரின் நம்பிக்கைகள்


மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நம்பிக்கைகள் மிகப்பல. இந்த நம்பிக்கைகளே தனிமனித வாழ்வையும் ஒரு சமுதாய வாழ்வையும் நடத்திச் செல்வனவாக விளங்குகின்றன.

நம்பிக்கை சொற்பொருள் விளக்கம்
நம்பிக்கை வாழ்க்கையில் முதன்மை பெறுகின்றது. அதனுடைய சொல்லாட்சியைப் பற்றி அறிதலும் தேவை. இரண்டு கைகள், கால்கள், கண்கள், காதுகள், ஒரு தலை, மூக்கு, வாய் போன்றவையுடன் அறிவும் பரிவுணர்வும் பெற்றவனே மனிதன் என்கிறோம். அதேபோன்று நம்பிக்கை என்பதற்கு,
விசுவாசம், ஆனை, நம்பியொப்புவிக்கப்பட்டது. உண்மை” என்றும் “சத்தியம், நிசம், உறுதிப்பாடு” என்றும் மதுரைத் தமிழ்ப் பேரகராதி பல்வேறு பொருள்களைத் தெரிவிக்கின்றது.
நம்பு என்பதற்கு “விருப்பம், நாவல்” எற்று, நாகை, ஆசை என்றும், “அருச்சகம், நம்பென்னேவல்” என்றும், அகராதிகள் பொருள் தருகின்றன.
தொல்காப்பிய்தில் “நம்பும் மேவும் நசையாகும்மே” என்று வருகின்றது. நம்பு என்ற சொல்லிற்கு ‘நசை’ அல்லது ‘விருப்பம்’ எனும் பொருளைத் தருகின்றது.
நற்றிணை 327ஆம் பாடலில் ‘நம்புதல்’ என்ற சொல்லாட்சி நம்பிக்கை என்னும் பொருளில் வந்தள்ளது. ‘நம்பிக்கை’ என்ற பொருளிலேயே நற்றிணையில் பயின்றுவந்துள்ளமையை அறிய இயலுகின்றது.
சேரியம் பெண்டிர் சிறுசொல் நம்பிச்
சுருவான் போல நோக்கும்”
இவற்றிலிருந்து நம்பு என்ற சொல், தொடக்கத்தில் ‘விருப்பம்’ என்ற பொருளிலும் பின்னர் ‘நம்பிக்கை’ என்ற பொருளிலும் வருவதை அறியமுடிகின்றது. இப்பொழுது நம்பிக்கை என்ற பொருளே வழக்கில் உள்ளது.
Faith, belief என்ற இரு சொற்களுக்கும் தமிழில் நம்பிக்கை என்ற ஒரே பொருள் உள்ளது.
Faith எனும் சொல் பெரும்பாலும் சமயஞ்சார்ந்த நம்பிக்கையைக் குறிக்கும்; Belief எனும் சொல் சமயஞ்சார்ந்த நம்பிக்கை மட்டுமின்றி ஏனைய சமூக வாழ்வியல் நம்பிக்கையையும் குறிக்கும்.

நம்பிக்கையின் தோற்றம்
நம்பிக்கைகள் எப்பொழுது தோன்றின என்று திட்டவட்டமாகக் கூற இயலாது எனினும் மனிதன் இயற்கையின் தாக்கத்திற்கு மிகுதியாக ஆட்பட்டிருந்த, அறிவு வளர்ச்சியின் தொடக்க நிலையிலே, நம்பிக்கைகள் தோன்றின எனலாம்.

நம்பிக்கையின் வகைகள்
நம்பிக்கைகள் பல்வகையின; பிறப்புமுதல் இறப்புவரை மனித வாழ்வில் பல்வகை நம்பிக்கைகளும் இடம்பெறுகின்றன. அவற்றுள் சில.
  1. இறை நம்பிக்கை
  2. ஊழ் பற்றிய நம்பிக்கை
  3. சோதிடத்தில் நம்பிக்கை
  4. சகுணத்தில் நம்பிக்கை (காக்கை, ஆந்தை, பல்லி, கண் துடித்தல்)
  5. தன்னம்பிக்கை
  6. சடங்கு நம்பிக்கை
  7. கனவு நம்பிக்கை
  8. வேறுபிற
புள் நிமித்தம்
தன் செயலில் நற்குறி காணுதலுடன் மனம் அமைதி கொள்வதில்லை. ஏனைய உயிரினங்களின் செயல்களிலும் நற்குறிகாண மனம் அவாவுகின்றது.
புள்ளினங்கள், விலங்குகளின் செயல்களில் நற்குறி,தீக்குறிகளைக் காண முற்படுகின்றது.
மாவும் புள்ளும் ஐயறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”
என்பது தொல்காப்பிய நூற்பா. அய்யறிவுயிரில் ஒருவகை, பறவை, ளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவரும் புள் என்பதற்குப் பறவை என்றே பொருள் கூறுகின்றனர்.
புள் என்ற சொல்லின் பொருள்
சங்க இலக்கியத்தில் ‘புள்’ என்ற சொல் பறவை என்ற பொருளையும், நிமித்தம் என்ற பொருளையும் குறிக்கும், பள் நிமித்தம் என்பது பறவை நிமித்தமாகவும் மாறும்.
நல்ல நல்லோர் வாய்ப்புள்”
எனவரும் முல்லைப் பாட்டில் பெண்டிருடைய நற்சொல் புள் நிமித்தமாகக் கொள்ளப்பட்டதை அறியமுடிகின்றனத.
புள் நிமித்தம் நன்னிமித்தமாகவும் தீ நிமித்தமாகவும் அமைதல் உண்டு. தீமை விளைவிக்கும் புள் நிமித்தத்தைப் புட்பகை என்று குறிப்பர்.
புதுப்புள் வரினும்பழம்புட் போகினும்
விதுப்புறல் அறியாவேமக் காப்பினை”
எனும் புறப்பாடல், புதுப்புள்ளின் வருகையும்பழம்புள்ளின் செல்கையும் தீ நிமித்தத்தைக் குறிக்கும்.
பொதுக்கடன் ஆற்றும்பொழுது பட்பகை தோன்றினும் அது கருதித் தம் செலூக்கங்குன்றாது வினை மேற்செல்வர் என்பதும் தெரிகின்றது.
உட்பகையொரு திறம் பட்டெனப் புட்பகைக்
கேவானாகலிற் சாவேம் யாமென
எனும் புறநானூற்று அடிகள் போருக்குப் புறப்படு முன்னர் ‘புள் நிமித்தம்’ பார்க்கும் நம்பிக்கை நிலவியதைப் புலப்படுத்தும்.
இரவலர், புலவலரை நாடிச் செல்லுங்காலத்தும் நாளும் புள்ளும் பார்த்தல்வழக்கில் இருந்து வந்துள்ளது.
நாளுக்கும் புள்ளுக்கும் கடந்த நிலையில் ஈத்துவக்கம் வள்ளியோரும் இருந்துள்ளனர்.
நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
பதனன்று புக்கத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குந ரல்லர் நெறிகொளப்
பாடான் றிரங்கு மருவிப்
பீடுகெழு மலையற் பாடியோரே
எனும் கபிலர் பாடல் இவ்வுண்மையை இயம்பும்.
பரிசில் பெற நினைத்துப் பாவலன் ஒருவன் வரையாது வழங்கம் காவலனை நாடிச் செல்கின்றான்; ஆனால், அப்பொழுது எண்ணிவந்த வண்ணம் பரிசில் பெற இயலாது போகின்றது. இந்நிலையிலும் காவலன் பழியெனக் கூறாது புள்ளையும் பொழுதையுமே பழிக்கிறான்.
புள்ளும் பொழுதும் பழித்த வல்லதை
உள்ளிச் சென்றோர் பழியல ரதனாற்
இதுவரை புள் பற்றிய பொதுவான நம்பிக்கைளை இலக்கியங்கள் வாயிலாக அறிந்தோம். இனி, காக்கை நம்பிக்கையைப் பற்றி அறியலாம்.

காக்கை நம்பிக்கை
இந்து சமயப் புராணங்கள் சில தெய்வங்கட்கு ஊர்திகளாய் உள்ளன. சனிக்கு ஊர்தி காக்கை, சனி, கோள்களுள் ஒன்று. அதன் பார்வைக்கு ஆளாவோர் இன்னல்களுக்கு ஆளாவர்; எனினும் சனியின் ஊர்தியான காக்கை கரைதலால் விருந்தினர் வருவர் என்ற நற்செய்தியை அறிவிப்பதாக நம்புகின்றனர்.
விருந்தினர் வருவர் என்று காக்கை கரைந்ததாகக் கூறும் குறுந்தொகைப் பாடலொன்றுள்ளது.
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே
தலைவனுடன் தலைவி உடன் போக்காய்ச் சென்று விட்டாள் என்பதை அறிந்து வருந்தும் நற்றாய், தலைவனும் தலைவியும் திரும்பி வந்ததும் மணம் முடித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாள். காக்கையை அதற்கு நந் நிமித்தமாகக் கரையும்படி வேண்டுகிறாள். அவ்வாறு கரைந்தால் பலிக்கடன் தந்து மகிழ்வுறுத்துவதாகவும் கூறுகிறாள்.
மறுவில்தூவிச் சிறுகருங் காக்கை
யன்புடை மரபினின் கிளையோடாரப்
பச்சூன் பெய்த பைந் நிணவல்சி
………………………………
அஞ்சி லோதியை வரக்கரைந்தமே
காக்கை கரைவதை எள்ளக்கூடாது என நம்பினர்.
கள்ளிய கலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையை
எனும் பழமொழி நானூறு பாடலில் இடம் பெறும் பாடல் இதைப் புலப்படுத்துகிறது.

காக்கையின் பலியுணவு
சங்க இலக்கியத்தில் நிமித்தங்கள்’ எனும் நூல் காக்கைக்குப் பலியுணவிடுவதை வகைப்படுத்தியுள்ளது.
இப்பலி இருவகையின.
  1. நெய் கலந்து வெண்ணெல் வெஞ்சோறு; இது புலவின்றி ஆக்கப்பெறும் சைவ உணவு.
  2. பச்சிறைச்சியிடப்பட்ட நிணத்தால் சமைத்த நல்லுணவு. இது புலவு கலந்த அசைவ உணவு என்கிறார் நூலாசிரியர்.
  1. ஆந்தை
காண்போர்க்கு அச்சத்தையும் அருவருப்பையும் தரும் ஆந்தை, பெரும்பாலும் காட்டிடை வாழும். பகலில் கண் தெரியாது; இரவில் நன்கு கண் தெரியம் ஆந்தையைத் தீமையின் நிமித்தமாக மக்கள் கருதினர். ஆந்தையின் அலறலைத் தீ நிமித்தமாகவே இலக்கியங்கள் சுட்டுகின்றன.
கவலை வெண்ணெரி கூஉமுறை பயிற்றிக்
கழங்கட் கூகைக் குழறுகுரற் பாணிக்
கருங்கட் பேய் மகள் வழங்கும்
பெரும்பா ழாகுமன்னிய தாமே”
கூகை குழறுதல் நாட்டிற்கு வரும் அழிவை உணர்த்தும் தீய நிமித்தமாக மேலே உள்ள பாடல் சுட்டுகின்றது.

பல்லி நிமித்தம்
விலங்கு, ஊர்வனவற்றில் நிமித்தம் பார்க்கும் பழக்கத்தை இலக்கியங்கள் காட்டுகின்றன. பல்லி, ஓந்தி, ஆமை, யானை, குதிரை, பன்றி, நரி போன்றவற்றில் நிமித்தம் பார்க்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
பல்லி ஒலித்தலை நிமித்தமாகக் கருதுதல் சங்ககாலம் தொட்டு இன்றுவரை தமிழ் மக்களிடம் இருக்கும் ஒரு வழக்கமாகும். சங்க இலக்கியத்தில் பல்லியின் ஒலி நன்னிமித்தமாகக் கூறப்படுகின்றது.
நாட்டார் பழக்கத்தில் பல்லியைக் ‘கெவுளி’ என்று குறிப்பர். பல்லியின் ஒலி நல்லொலியாக இருப்பதை வைத்து அவற்றைக் கணிவாய்ப்பல்லி, முதுவாய்ப்பல்லி என்று அழைத்துள்ளனர்.
உயர் புகழ் நல்லில்ஒள் சுவர்ப் பொருந்தி
நயவருகுரல பல்லி
நள்ளென் யாமத் துள்ளுதொறும்படுமே
என்றிவ்வாறு பல்லியொலி நன்னிமித்தமாக உள்ளதை அறியமுடிகின்றது.

மங்கலச் சொல் கேட்டல் () நற்சொல் கேட்டல்
நற்பணி ஒன்றுக்குத் திட்டமிடும்பொழுதிலோ, நற்பணி தொடங்கும்பொழுதிலோ, எதிர்பாரா இடத்திலிருந்தோ, பிறரிடமிருந்தோ மங்கல ஒலியோ சொல்லோ பிறக்கக் கேட்டால் அவற்றை நற்குறியாகக் கொள்ளுதலும், மேற்கொண்ட செயல் நன்கு முடியும், நற்பயன் விளையும் என்று நம்புதலும் வழக்கத்தில் உள்ளன. மேலும் ஏதேனும். ஒரு செயலைத் தொடங்கும்பொழுது அம்முயற்சி எவ்வாறு நிறைவேறும் என்பதை முன்கூட்டியே அறியமுனையும் மன உந்துதல், குறிகேட்கமுந்தும். மாந்தர்படும் துன்பம் நீங்கும் காலம் விரைந்து வருமா என்று நற்சொல் எதிர்பார்த்திருத்தலும் உண்டு. அவ்வகை முயற்சியை ‘விரிச்சி கேட்டல்’ என்று பழந்தமிழ் மக்கள் சுட்டினர்.

மங்கலப் பொருட்களில் நம்பிக்கை
தமிழர்கள் சிலவகைப் பொருட்களை மங்கலப் பொருள்களாகக் கருதியுள்ளனர். மங்கலப் பொருட்கள் என்று இன்றுள்ள தமிழர்கள் குங்குமம், மஞ்சள், பூ போன்றவைகளைக் கருதுவர்.
பழந்தமிழ் மக்கள் நெல்லும் மலரும் நன்மையின் சின்னங்கள் என நம்பினர். வாழ்த்துவதற்கும், இறைவனைப் போற்றி வழி படுவதற்கும் நெல்லையும் நீரையும், நெல்லையும் மலரையும் கொண்டு வாழ்த்தி வழிபட்டமையை இலக்கியங்கள் காட்டுகின்றன.
மலரும் நெல்லும், நெல்லும் நீரும் கொண்டு வாழ்த்துவதால் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பும், வளமைப் பெருக்கமும் உண்டு என்று நம்பினர்.
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடுதியங்க
வதுவை நன்மணம் கழிந்தபின்னை
எனும் அகநானூற்றுப் பாடல் அடிகளும்,
யாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
என்ற முல்லைப்பாட்டு அடிகளும் தெரிவிக்கும்.

தாலி பற்றிய நம்பிக்கை
தாலியை இன்றையத் தமிழர்கள் புனிதமான ஒன்றாகக் கருதுகிறார்கள். பண்டைய நாட்களில் தாலி என்பதைக் காப்பணியாககக் கருதி, சிறுவர்கட்கு இவ்வணியை அணவித்திருக்கிறார்கள். சங்க இலக்கியங்களில் தாலி பற்றிய குறிப்பு இன்று குறிப்பிடும் பொருளில் இல்லை. அன்று திருமணத்தில் தாலி இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

தாலியின் வகை
தாலியை இருவகையாக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவை
  1. புலிப்பல் தாலி
  2. அய்ம்படைத் தாலி

புலிப்பல்தாலி
சிறுவர்கட்கு வீரத்தின் அறிகுறியாகவோ ஆற்றலைப் பெருக்கும் காப்பணியாகவோ புலிப்பல்தாலியை மார்பில் அணிவித்தனர்
பொழுது மெல்லின்று பெயலு மோவாது
கமுகுகண் பனிப்ப வீசு மதன்தலைப்
புலிப்பற் தாலிப் புதல்வற் புல்லி
அன்னா வென்று மன்னையு மன்னோ
எனும் குறுந்தொகைப் பாடல் இதனைப் புலப்படுத்தும்.
சிறுமியர் பொன்னுடன் சேர்த்துச் செய்யப்பட்ட புலிப்பல் தாலியை அணிந்தனர்.
புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி
எனும் அகநானூற்றுப் பாடலடி இதனைப் புலப்படுத்தும்.

அய்ம்படைத்தாலி
இளம் பருவத்தில் ஆண் குழந்தைகள் கழுத்திலணியும் ஒருவகை அணி அய்ம்படைத்தாலி. அய்ம்படைத்தாலி பற்றிய செய்திகள் “மணிமேகலையிலும், திணைமாலை நூற்றைம்பதிலும் வருகின்றன”. என்கிறார் காந்தியவர்கள்.
இவ்வணிகள், அணிவோர்க்கு வீரம் ஊட்டுவனவாகவும் காப்பளிப்பனவாகவும் நம்பப்பட்டன.

மாந்தர் மாந்த உறுப்புகளில் நம்பிக்கை
நாள், கோள், புள், விலங்குகள் இவற்றின் அடிப்படையில் மட்டுமே நம்பிக்கைகள் அமைந்தன என முடிவு கொள்ளுதற்கு இல்லை.
மாந்தர்களின் வருகை, செல்கை, உரையாடல் போன்ற செயல்களும் மாந்த உறுப்புகளின் செயல்களும் குறிகளாக நிமித்தங்களாகக் கொள்ளப்பட்டன.
  1. மாந்தர் எதிர்ப்படுதல்
  2. கண்ணிமை துடித்தல்
  3. தும்முதல்
  4. வளைசெறிதல்
எனும்செயல்கள் அவற்றுள் சில. இவ்வகைச் செயல்களும் நன்மை தருவனவும் உள; தீமை தருவனவும் உள என நம்பினர்.

மாந்தர் எதிர்ப்படுதல்
பலவகை மாந்தர்கள் உள்ளனர். ஒரு காரியமாக செயலுக்காக வெளியே செல்லுகையில் சிலர் எதிர்ப்பட்டால் தீமை என்றும் சிலர் எதிர்ப்பட்டால் நன்மை எனவும் மனம் நினைக்கின்றது. இவ்வாறு எதிர்ப்படுதலையும் பழந்தமிழர் நிமித்தமாகக் கருதியுள்ளனர்.
குழல் விரிந்த ஒருத்தி வழிப்போக்கரின் எதிர்வர அது தீ நிமித்தமாகக் கருதப்பட்டதை,
வளரத் தொடினும் வௌவுபு திரிந்து
விளரி யுறுதகுந் தீந்தொடை நினையாத
தளரு நெஞ்சந் தலைஈ மனையோள்
உளருங் கூந்தனோக்கிக்களர
எனும் அடிகள் புலப்படுத்தும்
பரிசில் பெற்று வருவோனைப் பரிசில் பெறப்போவோன் எதிரில் பார்த்தலை நன்னிமித்தமாகக் கருதினர் என்பதை,
நன்னன்சேய் நன்னற்படர்ந்த கொள்கையோடு
உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த
புள்ளினர் மன்ற வெற்றாக் குறுதலின்
எனும் அடிகள் புலப்படுத்தும்.
மேற்கூறியவற்றிலிருந்து விரிகுழலாள் எதிர்ப்படுதல். தீ நிமித்தமாகவும் பரிசில்பெற்று வருவோன் எதிர்ப்படுதல் நன்னிமித்தமாகவும் கருதப்பட்டமை புலனாகின்றது.

கண் துடித்தல்
கண் இமைத்தல் என்பது இயல்பு நிகழ்ச்சி. ஆனால், கண்ணிமை துடித்தல் எப்போதேனும்நிகழ்வது. பெண்களுக்கு இடக்கண் துடித்தல் நன்மையைத் தரும்; வலக்கண் துடித்தல் தீமையைத் தரும் என்று மக்கள் நம்பினர் என்பதை இலக்கியங்கள் குறிக்கின்றன.
பிரிவுத் துன்பத்தில் உழலும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, “இடக்கண் துடிக்கின்றது. தலைவன் வருதல் உறுதி” என்று நிமித்தங்கூறி ஆற்றுவிக்கின்றமையை,
இணை நலமுடைய கானஞ் சென்றோர்
புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற்
பல்லியும் பாங்கொத் திசைத்தன்
நல்லெழி லுண்கணு மாடு மாலிடனே
எனும் கலித்தொகைப் பாடல் காட்டும்

தும்முதல்
தும்முதல் எனும் செயல் மூலம் தன்னை விரும்புபவர்கள் நினைக்கிறார்கள் என்று தமிழ்மக்கள் நம்பினர்.
இந் நம்பிக்கையைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை என்று காந்தியவர்கள் தெரிவிக்கிறார். ஆனால், இந்நம்பிக்கை, தமிழ் மக்களின் வாழ்வில் நிமித்தமாகக் கொள்ளும்வழக்கம் ஆழமாகப் படிந்துள்ளது.
உள்ளிய தன்மையர் பொலும்-அடுத்துஅடுத்து
ஒள்ளிய தும்மல் வரும்
எனும் பாடல் தலைவன் தலைவியை நினைக்கத் தலைவிக்குத் தும்மல் வரும் எனும் நம்பிக்கை நிலவியமைக்குச் சான்று.
வலம் வருதலில் நம்பிக்கை
வலம் வருதல் என்பது திருக்கோவிலையோ புனிதத் தீயையோ வலப்பக்கமாகச் சுற்றி வருதல் ஆகம். வலம் வருதல், வலம் வருவோர்க்குத் தீங்கு நீக்கி நலம் பயக்கும் என்று நம்பினர். வலம் வருவோரைக் காணலும் நற்பேறு என்ற நம்பினர்.

வலம் என்பதன் சிறப்பு
எந் நற்செயலாயினும், எவர்க்கேனும் ஒரு பொருளைத் தருவதாயினும், வலமே முதலிடம் பெறுகின்றது.
மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கால், கைகளைவிட வலதுகால், கைகள் பலம் வாய்ந்தவை.
சக்தியோடுவாழ நிரந்தரமாக எதிலும் வலப்புறமாக வருவது நன்ற என இந்துக்கள் நம்பினார்கள், நம்புகிறார்கள்.
வலம் என்பது நாம் வலிமையுடையோம் என்றும் பொருள் தருகிறது.
வலியோம், வல்லோம், வல்லம், வலம் இந்த நான்கு சொற்களும் ஒரே பொருள் உடையவை.
தனது வலிமையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலதுகாலை முதலில் எடுத்துவைக்கச் சொன்னார்கள் இந்துக்கள் என்கிறார். அர்த்தமுள்ள இந்துமதத்தின் ஆசிரியர் கண்ணதாசன்.

நாள் நம்பிக்கை
தமிழர்களின் பண்பாட்டில் எந்த ஒரு நற்செயலையம் நாளும் கோளும் பார்த்துச் செய்யும்வழக்கம் இருக்கின்றது.
திருமணம், பெயர் சூட்டு விழா, கோவில் திருவிழா போன்றவை நிகழ்தற்கு நல்ல நாள் பார்க்கும் பழக்கம் இருக்கின்றது. நல்ல நாள் பார்த்துச் செய்வதால் வாழ்வு சிறக்கும். இன்பம் பெற்று வாழ முடியும் என்றும் நம்புகின்றனர்.
தனி மனித விழாவாயினும், ஊர்ப் பொது விழாவாயினும் நல்ல நாளும் கோளும் பொழுதும் பார்த்துத் தொடங்கினால் விழா இனிது முடியும். நலம் விளையும். நன்மை தொடரும் என்று நம்புகின்றனர்.
தனிப்பட்ட முறையில் நம்பிக்கையில்லை என்று கூறுவோரின் இல்லத்து நிகழ்ச்சிகள் கூட நல்ல நாள், கோள், பொழுது பார்த்தே தொடங்கப்பெற்று நடத்தப் பெறுகின்றன. இத்தகைய முரண் ஏன் என்று வினவிய பொழுது, சமுதாய நம்பிக்கைகளையும் பழக்கவழங்கங்களையும் மீறி நடத்தற்குரிய இல்லச் சூழலோ சமுதாயச் சூழலோ இன்னும் ஏற்படவில்லை என்று கூறினர்.

கிழமைகள் பற்றிய நம்பிக்கை
சிலர் குறிப்பிட்ட கிழமைகளில் நற்செயல்கள் தொடங்கினால் நலமாக முடியும் என்றும் குறிப்பிட்ட கிழமைகளில் தொடங்கினால் அல்லல் ஏற்படும் என்றும் நம்புகின்றனர். சிலருடைய அனுபவங்களே பின்னாளில் நம்பிக்கைகளாகின்றன என்பதற்கு ஏற்ப இவர்களின் அனுபவங்களே இவர்களுக்கு முந்தையோர் நம்பிக்கைகளில் அசையா நம்பிக்கையை உண்டாக்கி இருக்கின்றன.
கிழமைகளில் புதனும் வியாழனும் சிறந்த கிழமைகளாக நம்புகின்றனர். ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்ற பழமொழி புதன் கிமை பற்றி மக்கள் மனத்தில் ஆழப் பதிந்திருப்பதனை உணர்த்துகிறது. வெள்ளிக்கிழமை அடுத்த நிலையைப் பெறுகின்றது.

காக்கை கரைதல்
மக்கள் தம்மைச் சுற்றியுள்ள இயற்கைப் பொருட்களின் மாற்றம், செயல் முதலியவற்றை வைத்தும் நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். அவற்றுள் ஒன்று காக்கை பற்றிய நம்பிக்கை.

நம்பவில்லை என்றவர்கள் அறிவியல் முன்னேற்றம் இருக்கும் இக்காலத்தில் விருந்தினர் வருகையைத் தெரிவிக்க தொலைபேசி, தந்தி, அஞ்சல் போன்ற வழிகளின் மூலம் தெரிவித்துத்தான் வருவார்கள் என்று கூறுகிறார்கள்.
நம்புவோரிடம் ஏன் நம்புகிறீர்கள் என்ற வினா வினை எழுப்பியபொழுது, ”நான்கைந்து முறை காகம் கரைந்தது: எங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தார்கள் எனவே, நம்புகிறோம்” என்ற தெரிவித்தனர்.
கல்வி வளர்ச்சியும், தகவல் தொடர்பில் முன்னேற்றமும் இவ்வகை நம்பிக்கையில் மாற்றம் இடம்பெறச் செய்து வருகின்றன என்று கொள்ளலாம்.

காக்கைக்கு உணவிடும் பழக்கம்
தாங்கள் சமைத்த உணவினை எவரும் உண்ணுதற்கு முன் காக்கைக்கு இடும் வழக்கம் இங்குள்ளோரிடை நிலவுகிறது காக்கைக்கு உணவிடும் வழக்கத்தினால் பிராமணர்களும், வைசியர்களும் பெரும்பான்மையினர். ஏனையோர் அமாவாசையன்று மட்டுமே உணவிடுகிறார்கள். சிலர் எஞ்சிய உணவினை காக்கைக்கு இடுகின்றனர். சிலர் தங்கள் முன்னோரின் நினைவுநாள்கள் சிறந்த விழா நாள்களில் முதலில் காக்கைக்கு உணவிடுகிறார்கள்.
முன்னோர் காக்கையுருவில் வந்து உணவினை உண்டு ஆசி வழங்குகிறார்கள் என்று நம்புகின்றனர். சிலர் காக்கைக்கு உணவிடுதல் ஒரு பிராமணனுக்கு உணவிடுதலுக்கு ஒப்பாகும்; இதனால் நலன்வரும் என்று நம்புகின்றனர். இன்னும் சிலர் உணவில் நச்சுத்தன்மை இருந்தால் காகம் அதை உண்ணாது; அதிலிருந்து நாம் அந்த உணவில் நஞ்சு உள்ளது என்று அறியலாம் என்கின்றனர்.
காக்கைக்கு வைக்கும் உணவை அண்டங்காக்கை உண்ணக்கூடாது. அப்படி முதலில் உண்டாம் தமக்குத் தீமை வரும் என்று நம்புவதாகக் கூறினார்கள். மணிக்காக்கை (காம்பல் நிகக் கழுத்துடையது) உணவினை உண்டால்தான் நலம்பயக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தனர்.
ஆழியிழைத்தலில் நம்பிக்கை
ஆழியிழைத்தல் என்றால் என்ன என்று தகவலாளர்கள் ஆய்வாளரையே வினவினர். ஆழியிழைத்தல் பற்றிக் கூறிய பிறகு, இது எல்லாம் நாங்கள் செய்வதில்லை, ஆனால் இறைவன் திருமுன் திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்த்தல் பூக்கட்டிப் போட்டுப் பார்த்தல் என்று நல்ல செயல்களுக்கு இறைவனின் அருளைப் பெறுவோம்” என்று ஒரு சிலர் தெரிவித்தனர்.

ஆந்தை ஒலியில் நம்பிக்கை
இங்கு ஒருமுறைகூட ஆந்தை வந்ததில்லை, எனவே அதைப் பற்றித் தெரியாது என்று அனைவரும் கூறினர். ஆனால், ஆந்தை ஒலித்தாலோ அல்லது வீட்டுக் கூரையின் மேல் அமர்ந்தாலோ தீமை என்று கூறுவதைக் கேட்டுள்ளோம், ஆனால் எங்களுக்கு அதுபற்றித் தெரியாது” என்று தெரிவித்தனர்.

பல்லி சொல்லும் பலனில் நம்பிக்கை
பல்லியை ஊர்வன வகையில்சேர்க்கலாம். இதன் ஒலியில் நன்மையும் தீமையும் வரும் என்று நம்புகின்றார்கள். இவ்வழக்கம் இன்றும் உள்ளதைக் களஆய்வு மெய்ப்பிக்கிறது.

பல்லி இருக்கும் நிலையில் நம்பிக்கை
பல்லி ஒலிக்கம் இடத்தை வைத்து நன்மை தீமைகள் கூறப்படுகின்றன. இருக்கும் நிலையில் நம்பிக்கை உண்டு, இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
நம்புகிறோம் என்று கூறியோரும் “இப்பொழுது பலன் பார்ப்பதில்லை. எங்கள் முன்னோர்கள் இதைச் சொல்லிச் சென்றார்கள். எனவே இருக்கும் நிலையில் நம்பிக்கை உண்டு ஆனால், விளக்கமாகத் தெரியாது” என்றனர்.

பல்லி சொல்லும் திசையில் நம்பிக்கை
பெரும்பாலும் சொல்லும் திசை வைத்து நன்மையா? தீமையா? என்று முன்னோர்கள் அறிந்தார்கள். அதனால் அவர்கள் நன்மை, தீமை என்ற கூறியவற்றில் ஒருசில மட்டுமே நினைவிலிருந்தாலும் பார்ப்பதில்லை என்றனர்.

பல்லி விழும் பலனில் நம்பிக்கை
பல்லி தலையில், கையில், உடல்மேல், விழுந்தால் ஒவ்வொன்றிற்கும் பலன் உண்டு என்று நம்புகின்றனர். பெரும்பான்மையினர் பல்லி உடலில் விழுந்தால் நன்மை என்றும் தலையில் விழுந்தால் கலகம் அல்லது கெட்ட செய்திகள் வரும் என்றும் நம்புகின்றனர். பஞ்சாங்கத்தில் பல்லி விழும் பலன் போடப்பட்டிருக்கிறது. அதில் குறித்துள்ளபடி சிற்சில வேளைகளில் நடக்கும். பெரும்பாலும் நிகழ்வதில்லை என்றனர்.

நற்சொல்லில் நம்பிக்கை
நல்ல சொற்கள் கேட்பதினால் தமக்கு நன்மையும் வாழ்வில் வளமும் மன அமைதியும் கிட்டும் என்று நம்புகின்றனர். சிலர் எச்சொல்லும் எங்களை ஒன்றும் செய்யாது; நம் கடமையைச் செய்தால் எத் தீச்சொல்லாயினம் சரி நற் சொல்லாயினும் சரி ஒன்றும் செய்யாது என்கின்றனர்.

தீயசொல்லில் நம்பிக்கை
தீய சொற்களைக் கேட்டால் தமக்குத் துன்பம் வரும் என்று பெரும்பாலோர் அஞ்சுகின்றனர். ‘நீ நாசமாகப் போவாய்’ என்று கூறி மணலைத் தற்றினால் நிச்சயம் உறுதியாக நடந்துவிடும் என்று நம்புகின்றனர். ‘நீ உருப்படாமல் போவாய்’ என்று கூறினாலும் ‘உன் குடும்பம் விளங்காமல் போக’ என்றாலும் அவ்வாறே ஆகிவிடும் என்று நம்புகின்றனர்.

மங்கலப் பொருட்களில் நம்பிக்கை
பூ, மஞ்சள், மஞ்சள் கலந்த அரிசி, குங்குமம் ஆகியவற்றை மங்கலப் பொருட்கள் என்று தமிழர்கள் கருதுகின்றனர். வீட்டிற்குப் பெண்கள் வந்தால் அவர்களுக்குப் பூ, பழம் தந்து சிறப்பிக்கிறார்கள். அப்படிச் சிறப்புக்குரியவர்களைச் சுமங்கலிப் பெண்கள் என்று அழைக்கின்றனர். முன்னர் நெல்லுடன் மலரும் சேர்த்து வாழ்த்துவதற்குப் பயன்படுத்தியமையை இலக்கியங்களில் அறிகின்றோம். ஆனால், இன்று மஞ்சள் கலந்த அரிசியுடன் மலரும் சேர்த்து வாழ்த்துதற்கும் வழிபடுதற்கும் பயன்படுத்துகின்றனர் என்பதை அறிகின்றோம்.

வலதுகண் துடித்தலில் நம்பிக்கை
பெண்டிர்க்கு வலதுகண் துடித்தல் நன்மையைத் தரும் என்று பெரும்பான்மையோர் நம்புகின்றனர். இதனால், பயன் பெற்றதாகவும் கூறுகின்றனர்.

மக்கள் எதிர்வருதல்
முக்கியமான விழா, நல்ல செயல் ஆகியவற்றிற்காகச் செல்கையில் நிமித்தம் பார்க்கும் வழக்கம் மக்களிடையே இன்ற குறைந்து வருகின்றது. முன்பு கைம்பெண் (விதவை) எதிரில் வந்தால் செயல் நடக்காது என்று நம்பினர். இக்காலத்தில் இவற்றில் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
மூவர் மட்டும் வண்ணான், நாவிதன், ஒற்றைப் பார்ப்பனன், கைம்பெண் (விதவை), தலைவிரித்த கூந்தலுடன் இருப்பவர் இவர்களைத் தீய நிமித்தமாகக் கருதினர். பிறவற்றை நன்னிமித்தமாகக் கருதினர்.

விலங்குகள் எதிர் வருதலில் நம்பிக்கை
நற்காரியத்திற்குச் செல்கையில் சில விலங்குகள் எதிர்ப்படுதல் நன்னிமித்தமாகாது என்று நம்புகின்றனர்.
அறுபத்து நான்கு விழுக்காட்டு மக்கள் தீய நிமித்தமாக எருமை, பூனை இவற்றைக் கருதுகின்றனர். நன்னிமித்தமாக பசு, காக்கை, மாடு இவற்றைக் கருதுகின்றனர். பாம்பு, ஆடு பற்றிய எந்தக்குறிப்பும் இல்லை.

வேண்டுதலில் நம்பிக்கை
இறைவன்தான் தனக்கு எல்லாம், அவனுடைய சீற்றத்திற்கு ஆளானால் துன்பம் விளையும் என்று அன்றும் மக்கள் நம்பினர்; இன்றும் மக்கள் நம்புகின்றனர். இதன் விளைவால் இன்று புதுப்புது வேண்டுதல்கள் தோன்றிவருகின்றன.

பலியிடுதலில் நம்பிக்கை
உயிர்ப்பலியிடுதலில் பெரும்பாலோர்க்கு நம்பிக்கை இல்லை. ஓர் உயிரைக் கொல்லுதல் என்பது பாவம். வாயில்லா உயிரைத் துன்புறுத்தல் மிகவும் கொடிய செயல் என்ற கருத்தையே கூறினர்.





வேறு பிற நம்பிக்கைகள்
  1. ஆடவர் நம்பிக்கை
  1. ஆண்கள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து ஆசிபெறவேண்டும்.
  2. ஆண்களுக்கு வலதுகண் துடித்தால் நல்லது நடக்கும்.

2. இறப்பில் நம்பிக்கை
  1. பிற உர்வலம் எதிரே வந்தால் நல்ல சகுணம்.
  2. பெண் பார்க்கப்போகும் இடத்தில் பக்கத்து வீட்டிலோ வழியிலோ இறப்பு இருக்கும் என்றால் அந்தப் பெண் வரும் இடம் நன்றாக இருக்கும்.
  3. இறப்பு ஊர்வலத்தில் பொரி இறைத்துவரும் முறத்தை முறிப்பர். இது இறந்தவர் செய்த பாவங்கள் அழிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையில் செய்யப்படுவது.
  4. சனிப்பிணம் துணை தேடும் என்ற நம்பிக்கை.
3. கனவு நம்பிக்கை
  1. கனவில் திருமணம் நடந்தால் வீட்டில் யாராவது இறப்பர்.
  2. இறப்பதுபோன்று கனவு கண்டால் வீட்டில் திருமணம் நடக்கும்.
  3. கோவில் குப்பாபிஷேகம் நடந்தால் வீட்டில் சாவு விழும்.
  4. கனவில் சாமி ஊர்வலம் வந்தால் யாராவது சாவார்கள்.
  5. கனவில் நட்சத்திரம் கீழே விழுந்தால் யாராவது இறப்பர்.
  6. போலீஸ்காரன் கனவில் துரத்துவதாக இருந்தால் எமன் ஊரில்
யாரையாவது பிடிப்பதாக அர்த்தம்.
(7) கனவில் பாம்பு கடித்தால் சனியன் வருகிறது.
(8) பாம்பு கனவில் துரத்தினால் சனியன் பிடிக்கின்றது.
(9) கனவில் இரயிலில் பயணம் செய்வதாக இருந்தால் நன்மை நடக்கும்.
(10) வீடு பற்றியோ வைக்கோல் போர் எரிவதாகவோ கனவு கண்டால் வீட்டில் உள்ளவர்களோ சொந்தக் காரர்கள் குடும்பத்திலோ பெண்கள் வயதுக்கு வருவார்கள்.
(11) கருத்தரித்தவர்கள் கனவில் தங்கநகை வாங்குவதாகக் கனவு கண்டால் பெண் குழந்தை பிறக்கும்.
(12) கனவில் காசு கிடைப்பதாகக் கண்டால் உடல்நிலை கெடும்.
(13) கனவில் யாராவது சீட்டுக் கொடுத்தால் எமன் அவர்களின் ஆயுளை முடிப்பார்.
(14) பெண்கள் அணியும் கால் மெட்டி, தாலி, கம்மல் இவற்றைக் கழற்றிக் கொடுப்பதாகக் கனவு கண்டால் கணவன் இறப்பான்.
4. குழந்தை நம்பிக்கை
  1. தலைச்சன் பெண் பிறந்தால் குடும்பம் நன்றாக இருக்கும்.
  2. ஆண் குழந்தை பிறந்தால் தாய் தகப்பனுக்கு அடங்காது.
  3. எட்டாம்பேறு ஆண் பிறந்தால் குடும்பம் நன்றாக இருக்கும்.
  4. ஐந்தாம்பேறு பெண் பிறந்தால் பிறந்த இடம் சுகமாக இருக்கும்.
  5. எட்டாம்பேறு பெண் பிறந்தால் எட்டிப்பார்க்கும் இடம் எல்லாம் பாழ்.
  6. பத்தாம்பேறு குழந்தை பெற்றால் தாயைபோ தந்தையையோ சாக அடிக்கும்.
  7. மூன்றாம் குழந்தைப்பேறு தாய் வீட்டில் நிகழ்ந்தால் தாய்வீட்டிற்கு ஆகாது.
  8. குழந்தைகள் கீழ் உதட்டைக் கடித்தால் நோய் வரும்.
  9. குழந்தைக்கு மூக்கின்மேல் அழுக்கு சேர்ந்தாலும் நோய் வரும்.
  10. குழந்தை மாலை போட்டுப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது.
  11. குழந்தை பிறக்கும்போது (விலங்கு) போட்டுப் பிறந்தால் குடும்பம் சண்டைசாடியில் மாட்டி யிருக்கும்.
  12. ஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்தால் துடுக்காக இருக்கும்.
  13. வியாழன் ஆண்பிள்ளை பிறந்தால் எந்தவிதை போட்டாலும் நன்றாக விளையும்.

5. சாதி நம்பிக்கை
  1. ஒற்றைப் பிராமணர் எதிரில் வந்தால் சகுனம் சரியில்லை.
  2. கிராமணி (மரம் ஏறுவர்) எதிரில் வந்தால் வெளியே போகக்கூடாது.
  3. வாணியன் (எண்ணெய் விற்பவன்) எதிரே வந்தால் சகுனத்தடை.
6. நாள் நம்பிக்கை
  1. வெள்ளிக்கிழமைதோறும் விளக்கு பூசை செய்ய வேண்டும்.
  2. இராகுகாலத்தில் எந்த நல்ல காரியம் செய்யவோ வெளியூர்களுக்குப் போகவோ கூடாது.
  3. செவ்வாய், வெள்ளி நாட்களில் பழைய துணிகளை யாருக்கும் தானம் செய்யக்கூடாது.
  4. வெள்ளிக்கிழமைகளில் கடையில் எண்ணெய் வாங்கக்கூடாது.
  5. அஷ்டமி, நவமி நாட்களில் எந்த நல்ல காரியமும் செய்தல் கூடாது.
  6. வீடகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்ணாடி உடைதல் கெட்டது.
  7. இராகுகாலங்களில் கோயிலுக்குச் சென்று இராகு கால பூசையை மேற்கொள்ளுதல்நலம்.
  8. விசேஷ நாட்களில் சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும்போது அமங்கலிகளைத் தவிர்ப்பது நல்லது.
  9. செவ்வாய், வெள்ளி நாட்களில் பணத்தைப் பிறருக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது.

7. பறவை நம்பிக்கை
  1. காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர்.
  2. வெளியில் செல்லும்போது காக்கை வலமிருந்து இடம்போதல் கெடுதல்.
  3. காலைவேளையில் காக்கைக்கு அன்னம் இட்டுவிட்டுத்தான் உண்ண வேண்டும்.
  4. ஆந்தை உட்கார்ந்த வீடு விருத்திக்கு வராது.
  5. கருடன் ஆகாயத்தில் பறக்கும்போது எந்த நாட்களில் பார்த்தாலும் நல்லது.
  6. காக்கைக்கு உணவு வைத்தபின் கையைக் கழுக வேண்டும்.
  7. காக்கை தலையில் அடித்தால் வீட்டிலோ உறவினரோ யாராவது இறப்பர்.
  8. ஒரு அண்டங்காக்கையைப் பார்த்தால் துன்பம். இரண்டு அண்டங்காக்கைகளைப் பார்த்தால் மகிழ்ச்சி.

8. பயண நம்பிக்கை
  1. வெளியில் கிளம்பும்போது மங்கலமாக இருப்பவர் வந்தால் காரியம் கைகூடும்.
  2. பூனை குறுக்கேவந்தால் பயணம் ஆகாது.
  3. ஏகாலி எதிரேவந்தால் பயணத்திற்கு ஆகாது.
  4. அம்பட்டன் எதிரேவந்தால் பயணத்திற்கு ஆகாது.
  5. விறகு, செத்தை கட்டாக எடுத்துக்கொண்டு பயண நேரத்தின்போது வந்தால் போகும் காரியம் நிறைவேறாது.
  6. பெண் பார்க்கப்போகும்போது கழுதை கத்தினாலோ எதிரே வந்தாலோ பெண் அமைவதோடு குடும்பத்திற்கு நல்ல பெண்ணாக அமையும்.

9. மகளிர் நம்பிக்கை
  1. பெண் குழந்தைகள் மல்லாந்து படுக்கக்கூடாது.
  2. புதுமணப்பெண் முதன்முதலில் வலது கால் எடுத்து வைத்துத்தான் கணவன் வீட்டினுள் நுழைய வேண்டும்.
  3. தாய் வீட்டில் பெண்கள் முந்தானை விரித்துப் படுத்தல் கூடாது.
  4. கணவனை இழந்த தாய்மார்கள் நல்ல காரியங்களில் முன்னால் வருவது தவறு.
  5. கர்ப்பிணிப் பெண்களை வெளியில் அனுப்பும்போதும் அவர்களுக்குப் பலகாரங்களைச்செய்துகொண்டு போகும்போதும் வேப்பிலைக் கொத்து வைத்தல் வேண்டும்.
  6. பெண்கள் மாதவிடாய் நாட்களில் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போவதைத் தவிர்த்தல் வேண்டும்.
  7. மாதவிடாய் நாட்களில் வாசனை மலர்கள் செடிகளிடம் குறிப்பாகத்துளசிச் செடியிடம் நெருங்குவது தவறு.
  8. இடதுகண் துடிப்பதால் பெண்களுக்கு நல்லது நடக்கும்.
  9. பெண்கள் தலைமூழ்கி உடனே சீப்புப் போட்டுச் சீவினால் சகோதரர்களுக்கு ஆகாது.
  10. பெண்கள் தங்களின் தாலியை நேருக்கு நேராக நின்று காட்டிக்கொண்டால் கணவருக்கு ஆகாது.
  11. பெண்கள் ஐந்து சனிக்கிழமை தொடர்ந்து தலை முழுகினால் அவர்கள் செல்வாக்குக் குறைந்து விடும்.
  12. மாசி மாதம் பெண் வயதுக்கு வந்தால் மங்கலத்தை இழப்பாள்.
  13. சித்திரையில் பெண் பிறந்தால் மறு சித்திரைக்கு மங்கை நூல் இழபை்பாள்
  14. செவ்வாயில் பெண் பிறந்தால் தோஷம் வரும்.
  15. பெண்கள் குப்புறப் படுக்கக் கூடாது.
  16. கர்ப்பிணிப் பெண்கள் முழுக்காயை உடைக்கக் கூடாது.
  17. கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட ஆசைப்பட்டதைச் செய்து தரவேண்டும்.
  1. மழை நம்பிக்கை
  1. கோழி, இறக்கையை விரித்தால் மழை வரும்.
  2. கறுப்பு எறும்பு, வரிசையாகச் சென்றால் மழை வரும்.
  3. தும்பி பறந்தால் மழை வரும்
  4. கொடிக்கால் (சனி மூலை) மின்ன வெடிகாலம் (விடியற்காலை) மழை வரும்.
  5. நாரை, கூட்டமாகப் பறந்துசென்றால் மழை வரும்.
  1. மாத நம்பிக்கை
  1. கார்த்திகைப் பிறை தெரிந்தால் நெல் நாற்று நடுகையை நிறுத்திவைப்பது நல்லது. அந்தஆண்டு மழை நன்றாகப் பெய்யும்.
  2. ஆடி மாதம் பதினைந்தாம் தேதி மதியம், உச்சிப்பொழுது சூரியனை மேகம் மறைத்தால் அந்த ஆண்டு மழை நன்றாகப் பொழியும்.
  3. தமிழ் ஆண்டு, சித்திரை முதல் தேதி, புதன்கிழமை பிறந்தால் அந்தஆண்டு செழிப்பாக, வளம் நிறைந்து இருக்கும்.
  4. ஆடிப்பிறையும் தைப்பிறையும் வடக்கே சாய்ந்திருந்தால் வரப்பெல்லாம் நெல்லாகவும், தெற்கே சாய்ந்திருந்தால் தெருவெல்லாம் பஞ்சமாகவும் இருக்கும்.

  1. வாகன நம்பிக்கை
  1. வாகனத்தின் வண்ண நம்பிக்கை
  2. வாகன எண் நம்பிக்கை
  3. வாகன எழுத்து நம்பிக்கை
  4. வாகனத்தைக் கிளப்பும்போது கடவுள் துதி நம்பிக்கை.
  5. வாகனத்திற்குத் திருஷ்டிக் கயிறு, படிகாரம் இவற்றை அணிவிப்பது நம்பிக்கை.
  6. முதலில் கிளம்பும்போது திசை பற்றிய நம்பிக்கை
  7. நீண்ட பிரயாணத்துக்கு முன்பும் பின்பும் கடவுள் துதி நம்பிக்கை
  8. வாகனத்தில் அமர்பவர்களின் எண்ணிக்கையில் ஒரு நம்பிக்கை.
  9. வாகன ஒட்டியின் ராசி நம்பி்க்கை.
  10. வாகனத்தைக் கிளப்பும்போது சகுன நம்பிக்கை
  11. நல்ல நேரத்தில் வாகனத்தில் செல்வதொரு நம்பிக்கை.
  12. வாகனத்தில் உள்ளே கடவுள் படம் வைப்பது அல்லது வேறு நம்பிக்கைப் படம் வைப்பது.
  13. உள்ளே வைக்கப்பட்டிருக்கும் படத்துக்கு மலர் அணிவிப்பது, ஊதுவத்தி கொளுத்துவது.
  14. வாரம் ஒருமுறை வாகனத்துக்குத் திருஷ்டி கழிப்பது.
  15. வாகனத்தின் முன்புறம் எலுமிச்சைப் பழம் தொங்க வைப்பது.
  16. வாகனத்தின்முன் மிளகாய்ப்பழம், எலுமிச்சை தொங்கவிடுவது.
  17. வாகனத்துக்குத் தினமும் கற்பூரதீபம் காட்டுவது.
  18. வாகனத்துக்குத் தினமு் எலுமிச்சை சுற்றிப் போடுவது.

  1. வாழ்வியல் நம்பிக்கை
  1. சூரிய உதயத்திற்குள் வாசல் தெளித்துக் கோலம் போடவேண்டும்.
  2. வாசலில் நின்று தலையை வாரக்கூடாது.
  3. சாப்பிடும்போது ஈரத் துணியுடன் சாப்பிடவோ பரிமாறவோ கூடாது
  4. சாப்பிடும்போது தட்டில் சாதம் இடதுகை ஓரமாகவே வைக்கப்படவேண்டும்.
  5. சுபகாரியத்தைச் செய்யச் சொல்லும்போது சகுனம் பார்த்தல்.
  6. உள்ளங்கை அரித்தால் பண வரவு.
  7. சாப்பாட்டில் கரித்துண்டு இருந்தால் விருந்துக்கு அழைப்பு வரும்.
  8. விளக்கு வைக்கும் நேரத்திற்குமுன் வீட்டிலிருந்து பெண்களை-சுமங்கலிகளை – வெளியே அனுப்பக் கூடாது.
  9. விளக்கு வைக்கும் நேரத்திற்குமுன் சாப்பிடக்கூடாது.
  10. விளக்கு இல்லாமல், இருட்டில் சாப்பிடக் கூடாது.
  11. விளக்கு வைத்தபின் (இரவில்) வீட்டைப் பெருக்கக் கூடாது. பெருக்கினாலும் குப்பையை வெளியே போடக்கூடாது.
  12. ரோமம் விழுந்த தண்ணீரைக் குடிக்கக்கூடாது.
  13. தண்ணீரில் முதலில் காலை விடக்கூடாது.
  14. இராத்திரி நேரத்தில் உப்பின் பெயரை வேறுபெயர் சொல்லித்தான் குறிப்பிடவேண்டும்.
  15. சாதித் திருடர்கள் அமாவாசை அன்று திருட வர மாட்டார்கள்.
  16. ஏணிப்படிக்கட்டுகள் ஒற்றை இலக்கத்தில் இருக்க வேண்டும்.
  17. வாழை இலையில் சாப்பிட உட்காரும்போது நுனி இலை இடதுபக்கம் வரும்படியாகப் போட வேண்டும்.
  18. இரவில் தலை வாருதல் கூடாது. கண்ணாடி பார்க்கக்கூடாது.
  19. ஒரு கையை ஊன்றிக் கொண்டு சாப்பிடக்கூடாது.
  20. புரைஏறினால் யாரோ வேண்டியவர்கள் நினைக்கிறார்கள்.
  21. ஒற்றைத் தும்பல் சகுனப்பிசகு.
  22. பிறந்த கிழமையில் எண்ணெய் வைத்துத் தலை முழுகுதல் கூடாது.
  23. வேண்டியவர்களை வழியனுப்பிவிட்டு வந்து தலை முழுகுதல் கூடாது.
  24. வேண்டியர்களிடமிருந்து செய்தி வந்த அன்று தலைமுழுகுதல் கூடாது.
  25. உலையில் அரிசி போடும்போது சிந்தக்கூடாது.
  26. சனி பகவான் கோவிலில் விழுந்து கும்பிடக்கூடாது.
  27. எந்தப் பொருளையும் இடது கையால் யாருக்கும் கொடுக்கக் கூடாது.
  28. கண்துடித்தால் பார்க்காதவர்களைப் பார்க்க வாய்ப்பு ஏற்படும்.
  29. காலையில் கண்விழித்ததும் கருங்குரங்கு முகத்தில் விழித்தல், உள்ளங்கையைப் பார்த்தல், பயிர் பச்சை முகத்தில் விழித்தல் இசை விசேஷம் நல்லது.
  30. வீட்டிற்கு மாடு பிடிக்கும்போது கொம்பு விரித்தாற்போல் இருந்தால் அதைப் பிடித்துச் செல்லுதல் வீட்டிற்கு ஆகாது.
  31. பிறந்த நாளில் தலை மூழ்கினால் அது உடம்பிற்கு ஆகாது.
  32. கதவில் துணியைப் போட்டால் வீட்டில் சண்டைச் சச்சரவு வரும்
  33. அரிசியைக் கழுவிக் கல்லை இறைத்தாலும் குடும்பத்தி்ல் சண்டை வரும்.
  34. ஒற்றைக்கல் மோதிரம் போடுபவர்கள்கால் மெட்டியை மிதித்தால் மிதிப்பவர்களுக்கு ஒற்றைத் தலைவலி வரும்.
  35. நகத்தில் சொத்தை விழுந்தால் குடும்பத்திற்குக் கெட்டது.
  36. சாப்பிடும்போது விளக்கு நின்றால் தரித்திரம்.
  37. வாசலில் உட்கார்ந்துகொண்டு தும்மினால் தரித்திரம்.
  38. வெள்ளிக்கிழமையில் கிழிந்த துணியைத் தைக்கக் கூடாது.
  39. வியாழனில் புதுத்துணி கட்டினால் அதிகமாகத்துணி சேரமு்.
  40. அரிசி அளக்கும்போது படி சாய்ந்தால் அல்லது அரிசி சிந்தினால் விருந்தாளி வருவார்கள்.
  41. கல்யாணச் சாமான்கள் வாங்கப் பட்டியல் போடும் பொழுது முதலில் மஞ்சள், குங்குமம் எழுதிய பிறகே பிறவற்றை எழுதுதல் வேண்டும்.
  42. தினமும் அந்தி சாயும் நேரம் பின் கதவைத் தாளிட்டுவிட்டுதான் சாமிக்கு விளக்கு ஏற்றவேண்டும்.
  43. அந்தி சாயும் நேரத்தில் துர்தேவதைகள் பறந்து கொண்டு இருப்பதால் நல்ல சொற்களையே பயன்படுத்துதல் வேண்டுமு்.
  44. விளக்கு வைத்தபின் அண்டை அசல் வீட்டிலிருந்து ஊசி, தயிர் போன்ற சாமான்கள் கடன் கேட்கக்கூடாது.
  45. வீட்டுப் படிக்கட்டைவிட்டு இறங்கும்போது எதிரில் நல்ல சகுனம் பார்த்து இறங்குதல்.
  46. ஒரு நல்ல காரியம் பேசப் போகும்போது மூன்று நபர்களாகப் போகக்கூடாது.
  47. நவராத்திரி ஒன்பத நாளும் பழைய துணிகளைத்தைக்கக் கூடாது.
  48. விளக்கு வைக்கும் நேரம் வீட்டில் படுத்து உறங்குதல் கூடாது.
  49. பிறந்த குழந்தையைப் பார்ப்பதற்கு யாராவது வந்துவிட்டுப் போனபிறகும் வியாழன், ஞாயிறு நாட்களிலும் திருஷ்டி சுற்றுவது ஒரு நம்பிக்கை.
  50. விளக்கு வைத்தவுடன் எள், ஊசி இவைகளைக் கடையில் விற்பனை செய்தல் கூடாது.

  1. விலங்கு நம்பிக்கை
  1. நரி முகத்தில் விழித்தால் நன்மை
  2. கழுதை கத்தினால் நல்ல பயன்.
  3. பல்லி சொல்லுக்கும் நல்ல பலன்
  4. கட்டிவைத்திருக்கும் மாடு தரையைப் புரண்டினாலும், துள்ளிக் குதித்தாலும் கட்டி இருக்கும் இடத்தைச் சுற்றி வந்தாலும் வீட்டிற்கு ஆகாது.
  5. மாட்டிற்கு உடம்பில் சுழி இருந்தால் அதைப் பிடித்துச் செல்பவர்களுக்கு ஆகாது.
  6. நாய் உதறிக் கொண்டு ஓடினால் நல்ல சகுனம்.
  7. வளர்க்கின்ற வீட்டில் நாய் அழுதால் அந்த வீட்டில் யாராவது இறப்பர்.
  8. ஆமை புகுந்தவீடு முன்னேறாது.
  9. நாய் ஓலமிடக்கூடாது.
  10. தெருவில் நடக்கும்போது பூனை குறுக்கே வந்தால் காரியத் தடையாகும்.
  11. விவசாயத்தில் நம்பிக்கை
  1. வீட்டுப் பயிர் சாகுபடி நன்றாக விளைந்தால் அந்தக் குடும்பத்தில் யாராவது இறப்பார்கள்.
  2. பயிர்ச் சாகுபடி செய்ய விதையிடும் போதோ நடவின்போதோ யாராவது இறந்த செய்தியைக் கொண்டு வருவார்கள் என்றால் அந்தப் போகம் மகசூல் நன்றாக விளையும்.



Comments

Post a Comment

Popular posts from this blog

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

உடல் நலத்திற்கு